ஐயா! யாழ்ப்பாணத்தில் என்ன நடக்குது
பொழுது சாய்ந்தால் மர்ம மனிதனின் பயம். விடிந்தால்; மர்ம மனிதன், பெண் கடத்தல், சிறுமியைக் காணவில்லை இப்படியான திகில் சம்பவங்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் இப்போது என்ன தான் நடக்கின்றது எனத் தெரியாமல் உள்ளது. யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் பயப்பீதியில் உறைந்து போயிருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மெளனமாக இருக்கின்றார்கள். இதை நாம் கூறினால் கூட்டமைப்புக்கு எதிர் என்று சொல்வார்கள். ஐயா! யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சம்பவங்களை ஆராய்ந்து பார்க்கும் போது அவசரகாலச்சட்டத்தை நீடிக்கும் எண்ணத்துடன் சம்பந்தப்பட்டதென்று கூறமுடியாது. அப்படியானால் இவை ஏன்? என்று தீர ஆராய்ந்தால், உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிப்புக் காரணமாக இவர்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்ற நினைப்போடு நடப்பதாகவே தெரிகின்றது. நிலைமை இதுவாக இருக்கும் போது தமிழ் மக்கள் வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள், மர்மமனிதன் என்ற பிரச்சினை நடக்கும் இடங்களுக்கு உடனடியாகச் சென்று விசாரணை நடத்துவது, அந்தப்பகுதி பொலிஸ் பொறுப்பதிகாரி, படை அதிகாரி ஆகியோருக்கு நிலைமையை எடுத்துக் கூறுவது, குய்யோ முறையோ என்று நாடாளுமன்றத்தில் கூப்பாடு போடுவது, தேவையாயின் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்றவர்களையும் அழைத்து ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது. இப்படியல்லவா செய்ய வேண்டும்? ஆனால் எதுவுமே நடைபெறவில்லை. ஒரு சில பிரதிநிதிகள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றிருந்தாலும் ஏனையவர்கள் எங்கே? அவர்கள் அடுத்த தேர்தலின் போதுதான் வருவார்களா? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமைக்காக இப்படிக் கொடூரம் நடக்கும் போது – அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையில், நாம் வாக்களித்தது தவறு என்ற முடிபை தமிழ் மக்கள் எடுப்பார்கள். அப்படியானதொரு முடிபை தமிழ் மக்கள் எடுத்துவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மீட்சியே இல்லை. உங்களுக்கு வாக்களித்துவிட்டு நாங்கள் உபாதைப்படும் போது நீங்கள் உங்கள் சொந்த அலுவலில் கவனமாக இருந்தால், மீண்டும் ஒரு தடவை உங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். இந்த முடிபை மக்கள் எடுப்பார்களா? என்பதை பார்ப்பதற்கு நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை. வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அதனை அனுபவிக்க முடியும். ஆகையால் கூட்டமைப்பினர் உடனடியாக யாழ்ப்பாணத்தில் முகாமிட்டு போர்க்கொடி தூக்க வேண்டும். அன்னா ஹசாரே போல் உண்ணாவிரதம் இருக்காவிட்டாலும் உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு நாளாவது குந்தியிருங்கள். உங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும்.
வலம்புரி
Leave a comment